விராட் கோலிகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க… கொலவெறில இருப்பாரு; அனைத்து அணிகளையும் எச்சரித்த முகமது கைப்
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி அனைத்து அணிகளுக்கும் பெரும் சவாலாக இருப்பார் என முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோத உள்ளன.
தனிப்பட்ட காரணங்கள் காரணமாக கடந்த இரண்டு மாத காலமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துள்ள விராட் கோலி, ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கும் நிலையில், விராட் கோலி அனைத்து அணிகளுக்கும் பெரும் சவாலாக திகழ்வார் என முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முகமது கைஃப் பேசுகையில், “சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் திரும்பும்போது விராட் கோலியிடம் இருந்து மிக சிறப்பான ஆட்டம் வெளிப்படும். கடந்த 2022ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரை இதற்கு உதாரணமாக எடுத்து கொள்ளலாம். 2022ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் முன்பு வரை பெரிதாக ரன் குவிக்க முடியாமல் தவித்து வந்த விராட் கோலி, ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அதன்பின் தொடர்ச்சியாக மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பெரும்பாலான வீரர்கள் தொடர்சியாக விளையாடி கொண்டே இருந்தால் மட்டுமே அவர்களால் தங்களது பார்மை தக்க வைத்து கொள்ள முடியும், ஆனால் விராட் கோலி அப்படிப்பட்டவர் இல்லை, ஓய்வில் இருந்து திரும்பி வரும் போது தான் அதிக ஆபத்தான பேட்ஸ்மேனாக திகழ்கிறார்” என்று தெரிவித்தார்.
2024 ஐபிஎல் தொடருக்கான பெங்களூர் அணி;
டூபிளசிஸ், கிளன் மேக்ஸ்வெல், விராட் கோலி, ராஜத் படித்தர், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஸ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லம்மோர், கரண் சர்மா, மனோஜ் பண்டாஜே, மாயன்க் தாகர், விஜய்குமார், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லே, ஹிமான்சு சர்மா, ராஜன் குமார், கேமிரான் க்ரீன், அல்ஜாரி ஜோசப், யஸ் தயால், டாம் கர்ரான், லோகி பெர்குசன், ஸ்வாப்னில் சிங், சவுரவ் சவுஹான்.