ஐ.பி.எல். தொடரின்போது வெளிநாட்டு அணிகளுக்கு இடையிலான இருநாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 20 ஓவர்கள் கொண்ட இந்த லீக்கிற்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஐ.பி.எல். கடந்த 10 வருடங்களாக ரசிகர்களின் பேராதரவோடு வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது.
அடுத்த வருடம் 11 சீசன் நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல். தொடரை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிசிசிஐ பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதிக அளவில பணம் கிடைப்பதால் வெளிநாட்டு வீரர்கள் அதிக அளவில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
வருகிற 2019-ம் ஆண்டிற்குப் பிறகு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன் லீக் தொடரை நடத்த இருக்கிறது. டெஸ்ட் சாம்பியன் லீக் தொடர் நடைபெற்றாலும் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர் நடத்தவும் ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு தொடர்ந்து போட்டிகள் இருந்து வருகிறது என குற்றச்சாட்டு எழுந்ததால், தற்போது அக்டோபர் – நவம்பர் மற்றும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் உள்ளூர் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. மார்ச் – ஏப்ரல் மாதத்தில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படும்.

கடந்த 7-ந்தேதி மற்றும் 8-ந்தேதிகளில் சிங்கப்பூரில் ஐ.சி.சி. கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வருங்கால போட்டி அட்டவணை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெறும்போது மற்ற வெளிநாட்டு அணிகளுக்கு இடையில் தொடர் நடத்தப்படக்கூடாது என்பதை இந்தியா எடுத்து வைத்துள்ளது. அப்படி நடத்தாவிட்டால் அனைத்து நாட்டு வீரர்களும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க முடியும். தொடரின் பாதிலேயே வெளியேறும் நிலைமை ஏற்படாது.
பெரும்பாலான கிரிக்கெட் வாரியம் தற்போது ஐ.பி.எல். தொடரின்போது இருநாடுகளுக்கு இடையிலான தொடரை நடத்துவது கிடையாது. ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மட்டும் ஏப்ரல், மே மாதத்தில் கிரிக்கெட் தொடரை நடத்துகிறது. இங்கிலாந்து மட்டும் சம்மதித்தால், ஐ.பி.எல். தொடரின்போது எந்தவொரு வெளிநாட்டு தொடரும் நடைபெறாது.
2020-ற்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விருப்பத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவிக்கும் எனக்கூறப்படுகிறது. இதனால் 2020-ல் இருந்து உலகளவில் ஐ.பி.எல். நடத்தப்படும்போது மற்ற சர்வதேச போட்டிகள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.