தென் ஆப்ரிக்கா தவிக்கும் நிலையில், ஹாயாக கோல்ஃப் விளையாட சென்ற டிவில்லியர்ஸ்.. கடுப்பில் கிரிக்கெட் வாரியம்
காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் டிவில்லியர்ஸ் ஓய்வு எடுக்காமல் கோஃப் விளையாட்டில் ஈடுபட்டு வருவது தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இரண்டு போட்டிகளில் முடிவில் இந்திய அணியே இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
காயம் காரணமாக ஸ்டைன், டிவில்லியர்ஸ், டூ பிளசிஸ் என தென் ஆப்ரிக்கா அணியின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து அணியில் இருந்து விலகி வருவதே தென் ஆப்ரிக்கா அணியின் இந்த படுதோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதில் குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்ரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் அணியில் இல்லாதது தென் ஆப்ரிக்கா அணிக்கு ஒவ்வொரு போட்டியிலும் பெரும் பின்னடைவை கொடுத்து வருகிறது.

மருத்துவர்கள் இரண்டு வார காலம் நிச்சயம் ஓய்வு தேவை என்ற அறிவுறுத்தியதன் பேரிலேயே டிவில்லியர்ஸுக்கு, இந்திய அணியுடனான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் ஓய்வு வழங்கியது.
நான்காவது ஒருநாள் போட்டியில் டிவில்லியர்ஸ் பூரண குணமடைந்து அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், டிவில்லியர்ஸோ ஓய்வு எடுக்காமல் கோல்ஃப் விளையாட்டில் படு பிஸியாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு Pretoria Country Clubல் இவர் கோல்ஃப் விளையாட சென்றது தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து பேசிய தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் “அணியில் இருந்து விலகிவிட்டால், ஒரு வீரர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் அது அவரது தனிப்பட்ட விருப்பம். அதில் எந்த தடையும் இல்லை, ஆனால் இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் ஓய்வு எடுக்காமல் மீண்டும் ஒரு விஷப்பரீட்சை செய்வது நல்லதல்ல” என்று தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ டிவில்லியர்ஸ் நிச்சயம் இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் நிச்சயம் அணிக்கு திரும்புவார் என்றும் அந்த நிர்வாகி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதே போல் தென் ஆப்ரிக்கா அணியின் அசுர வேக பந்துவீச்சாளரான டேல் ஸ்டைனும், மார்ச் மாதம் துவங்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் மூலம் அணிக்கு மீண்டும் திரும்புவார் என்றும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.