இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பிறகு விளையாட வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எம்.எஸ்.தோனி, ரெய்னா ஆகியோரைத் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ஒரு அணி, தன்னிடம் இருக்கும் வீரர்களில் 3 பேரை ஏலமின்றி தக்கவைத்துக் கொள்வதற்கு ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இது, தடைக்காலம் முடிந்து 2018-ஆம் ஆண்டு சீசனில் போட்டிக்குத் திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த 2015-ஆம் ஆண்டில் தங்கள் வசம் இருந்த வீரர்களை ஏலமின்றி தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஏலமின்றி தக்கவைத்துக்கொள்ளவேண்டிய 3 வீரர்களில் தோனி, ரெய்னா ஆகியோரைத் தேர்வு செய்யவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கூறியுள்ளது.
சிஎஸ்கே அணியின் இயக்குநர் ஜார்ஜ் ஜான் ஒரு பேட்டியில் கூறியதாவது:
தோனி, ரெய்னா ஆகிய இருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளோம். மூன்றாவது வீரர் குறித்த முடிவை இனிமேல்தான் எடுக்கவேண்டும்.
ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக்கொள்ளும் விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 4-ம் தேதிக்குள் வழங்கவேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. டிவைன் பிராவோ, மெக்குல்லம், டுபிளெஸ்ஸி, ஆண்ட்ரூ டை போன்ற வீரர்களும் எங்கள் பரிசீலனையில் உள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் போட்டியை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு வருகிறோம் என அவர் பேட்டியளித்துள்ளார். இந்தப் பேட்டியின் மூலமாக அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரில் ஒருவரை மட்டுமே சிஎஸ்கே தேர்வு செய்யும் எனத் தெரிகிறது.
தோனி, ரெய்னா தவிர ஜடேஜா, பிராவோ, டுப்ளெஸ்ஸி ஆகிய வீரர்களைத் தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது. கடந்த வருட ஐபிஎல் போட்டியில் அசத்திய புணே ஐபிஎல் அணி வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தரையும் தேர்வு செய்ய வாய்ப்புண்டு.
மூன்று வீரர்களை தக்கவைத்துக்கொண்டால் சென்னை அணி வசம் உள்ள ரூ. 80 கோடியில் ரூ. 33 கோடி செலவாகிவிடும். மீதமுள்ள தொகையைக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்கவேண்டும். இரு வீரர்களை ரைட் டூ மேட்ட் கார்ட் வழியாகத் தேர்வு செய்யலாம்.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட லோதா குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது.
ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதன் காரணமாக அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணிகளைச் சேர்ந்த வீரர்கள், புதிதாக போட்டியில் சேர்க்கப்பட்ட ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் விளையாடினார்கள்.