தனது 19 வயதிலேயே இந்திய அணிக்கு கீப்பராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானர் தினேஷ் கார்த்திக். அப்போதிலிருந்து அணியில் சரியான நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வந்தார். அவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் இருந்தவர் தோனி.

அவர் அணியின் கேப்டனும் கூட, அற்புதமான பேட்ஸ்மேஸ் மற்றும் பினிஷர். இப்படி ஒரு வீரரிடம் இருந்து அந்த இடத்தை பறிப்பது முடியாத காரியம் என தனி பேட்ஸ்மேனாக கிரிக்கெட் வாழ்க்கையில் பயணித்தார் தினேஷ் கார்த்திக். 2007டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்தார்.
பின்னர் சரியாக இடம் இல்லாமல், 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபியில் தனி பேட்ஸ்மேனாக ஒரளவிற்கு சோபித்தார். பின்னர் உள்ளே வெளியே ஆடிக்கொண்டிருந்த கார்த்திக், அணியில் 4ஆவது இடம் தடுமாறும் போது சரியாக கை கொடுத்து கிட்டத்தட்ட இடத்தினை உறுதி செய்துவிட்டார் தினேஷ் கார்த்திக்.

தற்போது ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ள தினேஷ் கார்த்திக் அதற்கு சரியான நேரத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வழங்கிய ஆலோசனை உதவியாக இருந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பராக விருத்திமான் சாஹா உள்ளார். அதேவேளையில் குறுகிய வடிவிலான போட்டிகளில் மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு அணியில் இடம் பிடிப்பதற்காக இளம் வீரர்களான சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்களுடன் மூத்த வீரரான பார்த்தீவ் படேலும் தேர்வுக்குழுவினரின் பார்வையில் விழுந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபகாலமாக ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே இடம் பெறும் அவர், கிடைக்கும் வாய்ப்புகளில் தன்னை வலுவாக நிருபித்து வருகிறார். தற்போதைய பார்மை அவர், தொடரும் பட்சத்தில் அணியில் 4-வது வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:
4-வது வீரராக அணியில் என்னை நிலைநிறுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கருதிக்கொள்ளலாம். ஆனால் நான் அதை அவ்வாறு பார்க்கவில்லை. எதிர்காலத்தில் அணியில் இடம் பிடிப்பதற்கு அந்த வழியை நினைத்துக் கொண்டிருந்தால் நமக்கு நாமே அழுத்தம் கொடுத்துக் கொள்வதாகத் தான் இருக்கும். நியூஸிலாந்து தொடரில் நான் பேட் செய்த விதம் திருப்தி அளிக்கும்படி இருந்தது.
அடுத்த வாய்ப்பை பெறும்போதும் இதேபோன்று சிறப்பாக செயல்படுவதே எனது எண்ணம். எனது பேட்டிங் குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி உள்ளேன். நியூஸிலாந்து தொடரில் நான் பேட் செய்த விதத்தால் அவர் மகிழ்ச்சியடைந்தார். எனினும் சில பகுதிகளில் நான் முன்னேற்றம் அடைய வேண்டியதை அவர் சுட்டிக் காட்டினார். அதை ஏற்றுக்கொண்டேன். அதில் முன்னேற்றம் காண்பதிலேயே தற்போது செயல்பட்டு வருகிறேன்.