முதல் ‘டுவென்டி-20’ போட்டி இன்று கட்டாக்கில் நடக்கிறது. இதில் ‘சூப்பர் பார்மில்’ உள்ள இந்திய அணியின் ‘தாக்குதலை’ இலங்கை எப்படி சமாளிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று ‘டுவென்டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று ஒடிசாவின் கட்டாக் நகரில் நடக்கவுள்ளது.
இதற்காக நேற்று இரு அணி வீரர்களும் பயிற்சி செய்தனர் . இந்த பயிற்சியில் இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கலந்து கொள்ளவில்லை. மேலும், இந்திய அணி மாதானத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது, ஹர்திக் பாண்டியா ஹோட்டலில் தனது அறையில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா கலந்துகொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை இலங்கைக்கு எதிரான டெஸ்ட் (1-0), ஒரு நாள் (2-1) தொடரை கைப்பற்றிவிட்டது. ‘டுவென்டி-20’ போட்டியிலும் அசத்தினால், ‘ஹாட்ரிக்’ தொடரை கைப்பற்றலாம். ‘ரெகுலர்’ கேப்டன் கோஹ்லி இல்லாத அணியை திறம்பட வழிநடத்தினார் ரோகித். மொகாலியில் நடந்த ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து வெற்றிக்கு கைகொடுத்தார். இவருடன் ஐ.பி.எல்., தொடரில் கைதேர்ந்த லோகேஷ் ராகுல் களமிறங்க காத்திருக்கிறார்.
துடிப்பான தோனி
கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர், கடந்த இரண்டு ஒரு நாள் போட்டியில் அரை சதம் கடந்து அசத்தினார். ‘மிடில்-ஆர்டரில்’ தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே கை கொடுப்பது அவசியம். சூழ்நிலைக்கேற்ப விளையாட தோனி ‘ரெடி’. பாண்ட்யா இருப்பதால் ‘ஆல்-ரவுண்டர்’ தீபக் ஹூடாவுக்கு அறிமுக வாய்ப்பு கிடைப்பது கடினம் தான்.
வேகக்கூட்டணி எப்படி
வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவருக்குப்பதில், ஐ.பி.எல்., தொடரில் (குஜராத்) நம்பிக்கை அளித்த (11 போட்டி, 12 விக்.,) பசில் தம்பி இடம் பிடிக்கலாம். மறுபுறம், கடந்த ஜூனில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ‘டுவென்டி-20’யில் பங்கேற்ற உனத்கட் இடம்பெற தயாராக உள்ளார். எப்படி இருந்தாலும், ‘யார்க்கர்’ பும்ராவின் பொறுப்பு அதிகரித்துள்ளது. குல்தீப், சகால் மீண்டும் ‘சுழல்’ ஜாலம் காட்டலாம்.
பலன் இல்லை
இலங்கை அணிக்கு புதிய கேப்டனாக திசரா பெரேராவை நியமித்தும் பலன் கிடைக்கவில்லை. கடந்த 5 ‘டுவென்டி-20’ போட்டிகளிலும் வீழ்ந்துள்ளதால் இன்றும் நெருக்கடியை சந்திக்கலாம். விசாகப்பட்டனத்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் 95 ரன் விளாசிய தரங்கா, மாத்யூஸ், டிக்வெல்லா நம்பிக்கை சேர்க்கின்றனர்.
வேகப்பந்துவீச்சாளர் லக்மல், தர்மசாலாவில் நடந்த போட்டியில் (4 விக்.,) மட்டும்தான் கைகொடுத்தார். பின், இவரது பந்துவீச்சை இந்திய வீரர்கள் விளாசினர். மாத்யூஸ், பிரதீப்பும் விக்கெட் வீழ்த்த தடுமாறுகின்றனர்.
இந்திய அணியை ‘டுவென்டி-20’ போட்டிகளில் வழிநடத்தும் 6வது இந்திய வீரர் என்ற பெருமை பெறுகிறார் ரோகித். இதற்கு முன், சேவக், தோனி, ரெய்னா, கோஹ்லி, ரகானே இந்த இலக்கை எட்டி இருந்தனர். தவிர, இலங்கை எதிராக அணியை வழிநடத்தும் மூன்றாவது இந்திய வீரரானார்.
இந்தியா ஆதிக்கம்
இரு அணிகளும் இதுவரை ‘டுவென்டி-20’ தொடரில் ஐந்து முறை பங்கேற்றுள்ளன. இதில் 4 முறை இந்திய அணி கோப்பை வென்றுள்ளது. ஒரு முறை தொடர் ‘டிரா’ ஆனது.