ஆட்ட நேர முடிவில் கேப்டன் விராட் கோலி, 186 பந்துகளுக்கு 156 ரன்னுடனும், ரோஹித் சர்மா 14 பந்துகளுக்கு 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 90 ஓவர்களுக்கு 371 ரன் குவித்து 4 விக்கெட் மட்டுமே இழந்துள்ளது
இந்தியா – இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் முரளி விஜய், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். அணியின் ஸ்கோர் 42 ரன்னாக இருக்கும்போது தவான் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த புஜாராவும் 23 ரன்களில் வெளியேறினார்.
புஜாரா அவுட்டாகும்போது இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் முரளி விஜய் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஒவருக்கு நான்கு ரன்களுக்கு மேல் சென்று கொண்டிருந்தது.
13 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா 23.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. முரளி விஜய் 67 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்தியா முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 27 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது முரளி விஜய் 51 ரன்னுடனும், விராட் கோலி 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்த பின்னர் இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்தியா 35.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. விராட் கோலி 52 பந்தில் 10 பவுண்டரியுடன் 50 ரன்கள் சேர்த்தார்.
இந்தியா 45.5 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது. சிறப்பாக விளையாடிய முரளி விஜய் 163 பந்தில் 9 பவுண்டரியுடன் சதம் அடித்தார். நாக்பூர் டெஸ்டிலும் முரளி விஜய் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தேனீர் இடைவேளை வரை 57 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 101 ரன்னுடனும், விராட் கோலி 94 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளை முடிந்ததும் விராட் கோலி சதம் அடித்தார். அவர் 110 பந்தில் 14 பவுண்டரியுடன் இந்த சதத்தை அடித்தார். இது அவரின் 20-வது சதம் ஆகும்.
தொடர்ந்து விளையாடிய விராட் கோலி மற்றும் முரளி விஜய் ஆகியோர் 150 அடித்தனர். ஆட்டம் முடிவடைய 4 ஓவர்களே மீதம் இருந்து நிலையில், லக்சன் சன்டாகான் பந்தில் நூலிலையில் டிக்வெல்லாவிடம் ஸ்டம்பிங் ஆனார். 267 பந்தில் 155 ரன் குவித்தார் முரளி விஜய். அதன் பின்னர் வந்த அஜின்கியா ராகனே வந்த வேகத்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார்.
ஆட்ட நேர முடிவில் கேப்டன் விராட் கோலி, 186 பந்துகளுக்கு 156 ரன்னுடனும், ரோஹித் சர்மா 14 பந்துகளுக்கு 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 90 ஓவர்களுக்கு 371 ரன் குவித்து 4 விக்கெட் மட்டுமே இழந்துள்ளது