தோனி பாணியில் கேப்டன் பொறுப்பை கொண்டு செல்லவேண்டும் என நினைக்கிறேன் என்று பேசியுள்ளார் ஹர்திக் பாண்டியா.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய ஒருநாள் தொடர் அதிக ஸ்கோர்கள் அடிக்கப்பட்ட தொடராக அமைந்தது. ஆனால் நடைபெற்று வரும் டி20 தொடர் குறைந்த ஸ்கோர்கள் அடிக்கக்கூடிய மைதானங்களில் நடைபெற்று வருகிறது.
முதல் டி20 போட்டி நடந்த ராஞ்சி மைதானத்தில் 150 ரன்கள் அடிப்பதே கடினமானதாக இருக்கும். ஆனால் கடைசியில் இந்திய பவுலர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால், 176 ரன்கள் வரை அடித்துவிட்டனர். அதை சேஸ் செய்த இந்திய அணியால் 155 ரன்கள் கூட அடிக்க முடியவில்லை.
அதேபோல் லக்னோ மைதானமும் பந்துவீச்சிற்கு சாதகமாக தயார் செய்யப்பட்டு மிகவும் குறைவான ஸ்கோரிங் கேமாக மாறியது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வெறும் 99 ரன்கள் மட்டுமே அடித்தது. அதை இந்திய அணி சேஸ் செய்வதற்கு கடைசி ஓவர் வரை எடுத்துக் கொண்டது.
எதற்காக டி20 போட்டிகள் இப்படி குறைந்த ரன்கள் அடிக்கக்கூடிய மைதானங்களில் நடத்தப்பட்டு வருகிறது? அதேபோல 100 ரன்களை சேஸ் செய்ய ஏன் கடைசி ஓவர் வரை செல்லவேண்டும்? என ஹார்திக் பாண்டியாவிடம் கேட்டதற்கு, அவர் பதில் கூறியிருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா பேசியதாவது: “இந்த 100 ரன்களை சேஸ் செய்ய எதற்காக கடைசி ஓவர் வரை எடுத்துக்கொண்டோம் என்பதற்கு யுக்தி இருக்கிறது. இந்த குறைந்த ஸ்கோர் மைதானங்களில் விளையாடும் பொழுது பேட்ஸ்மேன்கள் முழு கவனத்துடன் விளையாட வேண்டும். அவர்களது பேட்டிங்கை பரிசோதிப்பதற்கு உகந்ததாகவும் இருக்கும்.
இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி இது போன்ற குறைந்த ஸ்கோர் சேஸ் செய்யக்கூடிய மைதானங்களில் அணுகுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல திட்டங்கள் வகுக்க முடிவு செய்துள்ளோம். இது தோனியின் கேப்டன்ஷிப் பாணி. அவரது திட்டங்கள் இந்தியாவிற்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளது. நானும் அதை ஃபாலோ செய்ய நினைக்கிறேன்.” என்றார்.