மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது எனது கடின முயற்சிக்கு கிடைத்த பரிசு: குல்தீப் யாதவ்

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி-20 போட்டியில் விளையாடுகின்றது. நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இதற்கிடையே, மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை பல்லேகெலேவில் தொடங்க உள்ளது.

இரண்டாவது டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா விதிமுறைகளை மீறியதற்காக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை மேற்கொண்டது.

இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல், 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மூன்றாவது போட்டியில் விளையாடும் இந்திய அணியின் 11 பேர் கொண்ட பட்டியலில் குல்தீப் யாதவ் இடம்பெறுவார் எனத் தெரிகிறது.

இதுதொடர்பாக குல்தீப் யாதவ் கூறுகையில், ’’இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் எனது பெயர் இடம்பெற்றால் மகிழ்ச்சி அடைவேன். இலங்கை உடனான டெஸ்ட் போட்டியில் ஆடுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த வாய்ப்பை எனது திறமைக்கு கிடைத்த பரிசாகவே கருதுகிறேன். இந்திய அணிக்காக விளையாடுவதில் ஆர்வமாக உள்ளேன். எனது திறமையை நிச்சயம் வெளிப்படுத்துவேன்’’ என தெரிவித்துள்ளார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.