உலக கோப்பையை இழந்தது இந்திய வீரர்களுக்கு இப்படித்தான் இருக்கிறது என்று தனது சமீபத்திய வீடியோவில் பேசியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா செமி-பைனல் வரை சென்று பரிதாபமாக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. குறைந்தபட்சம் இறுதி போட்டி வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, இப்படி அரையிறுதி போட்டியில் படு மோசமாக தோல்வியை சந்தித்து வெளியேறியதால் ரசிகர்கள் இந்திய வீரர்கள் மீது பேரதிர்ச்சியில் இருக்கின்றனர்.
கேஎல் ராகுல், விராட் கோலி போன்ற வீரர்கள் இந்த தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு தங்களது சமூக வலைதளத்தில் வருத்தத்தை தெரிவித்திருந்தனர். ரவிச்சந்திரன் அஷ்வின் இதற்காக பிரத்தியேக வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், “ரசிகர்களின் கொந்தளிப்பை புரிந்து கொள்ள முடிகிறது. எங்களுக்கும் அதே வருத்தம் இருக்கிறது.” என்று ஆறுதலாக பேசி இருந்தார்.
ஆனால் ரோகித் சர்மா இதற்கு எந்தவித வருத்தமும் தெரிவிக்காதது கூடுதல் வலியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. வீரர்கள் எந்த அளவிற்கு வருத்தத்தில் இருக்கிறார்கள் என்பதை தனது சமீபத்திய வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
உலககோப்பையில் இருந்து பாதியிலேயே வெளியேறியது எங்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த முடிவை கண்டு பலரும் அதிர்ச்சியில் இருப்பீர்கள் என்று உணர முடிகிறது.
உலககோப்பை போன்ற தொடரில் செமி-பைனல் மற்றும் பைனலுக்குள் செல்வதே பெரிது. ஆனால் இந்திய அணி மீது அளவு கடந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருப்பதால், அரையிறுதி வரை சென்றதையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் மட்டுமல்ல, சக இந்திய வீரர்களால் இதை புரிந்து கொள்ள முடிகிறது.
நாங்களும் இந்த தோல்வியால் ரசிகர்களை விட 200-300 மடங்கு வருத்தமாக இருக்கிறோம் என்பதை நீங்களும் உணர வேண்டும். இந்த தொடர் முழுவதும் இந்திய வீரர்கள் கொடுத்த பங்களிப்பை நினைத்துப் பார்க்க வேண்டும்.” என்றார்.
மேலும், “இங்கிலாந்து அணிக்கு எனது வாழ்த்துக்கள். 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு வெள்ளை பந்து போட்டிகளில் அவர்கள் செயல்பட்டு வரும் விதம் எதிரணிக்கு பெருத்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இயான் மார்கன் அந்த அணியின் ஆட்டத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறார். ஜோஸ் பட்லர் வந்தபிறகு, பயமற்ற கிரிக்கெட்டை விளையாடி வருவது அவர்களது பலமாக இருக்கிறது.” என்றும் பேசினார்.