யாகூ இணையதளத்தில் அதிகம் தேடும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியை தற்போதைய கேப்டன் விராட் கோலி முந்தியுள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் டோனி. இவர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும்போது கூகுள் மற்றம் யாகூ இணையத் தளங்களில் அதிகம் தேடுபவர் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.
தற்போது இந்திய அணி கேப்டனாக விராட் கோலி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில முடிவடைந்த இலங்கைக்கு எதிரான தொடரில் ஐந்து இன்னிங்சில் 610 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு டபுள் செஞ்சூரி, தலா ஒரு சதம் மற்றும் அரைசதம் அடங்கும்.

610 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி, டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், இந்த மாதம் மத்தியில் அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தியும் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் யாகூ இணைய தளத்தில் விராட் கோலி என்று டைப் செய்து தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் அதிகம் தேடும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோனியை முந்தி விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார்.

விராட் கோலி, டோனியை அடுத்து பி.வி. சிந்து, கவுதம் காம்பீர், ரவி சாஸ்திரி, மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்ரீசாந்த், ராபின் உத்தப்பா, இர்பான் பதான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்திய அளவில் பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.