Cricket, Virat Kohli, Ravi Shastri, Virender Sehwag, India, BCCI

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த தயக்கமும் இல்லை என கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியுடனான தொடரில் பங்கேற்க இந்திய அணி இன்று புறப்பட்டு சென்றது. இலங்கையில் வரும் 26-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இலங்கையுடன் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள்
போட்டிகள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்தில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வந்துள்ளோம் என்பதால் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் எழ வாய்ப்பில்லை. அணிக்கு தேவையானது என்ன என்பதை இருவரும் உணர்ந்துள்ளோம்.

ரவிசாஸ்திரியுடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த தயக்கமும் இல்லை. அவரது தலைமையின் கீழ் செயல்படும்போது எந்தவிதமான மன அழுத்தமும் ஏற்படாது. அணி ஒற்றுமையுடன் செயல்பட்டு வருவதால் வெற்றிகளை தொடர்வதில் எந்த சிரமமும் இல்லை.

ஒவ்வொருவருக்கும் கடினமான நேரம் ஒன்று வரும். அதை அனைவரும் சந்தித்தே ஆக வேண்டும். அணியின் எந்த முடிவுக்கும் கேப்டன் என்ற முறையில் நான் தான் பொறுப்பு என்பதை உணர்ந்துள்ளேன்.

புரிந்துணர்வு மற்றும் இணைந்து செயல்படுவது என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் கடைப்பிடிக்க முடியும். கிரிக்கெட்டில் மட்டுமின்றி அனைத்து விஷயங்களிலும் இதை கடைப்பிடிக்கலாம். வாழ்க்கையிலும் இந்த விதிகளை கடைப்பிடித்தால் உறவுமுறைகளுக்குள் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி பொறுப்பேற்று பங்கேற்கும் முதல் தொடர் இது என்பதால் அணியின் வெற்றி குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *