நியூசிலாந்து தொடர் முழுவதும் இவர்தான் துவக்க வீரராக விளம்பரங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் வாசிம் ஜாபர்.
நடந்து முடிந்திருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு எதிர்பார்த்தவாறு செல்லவில்லை. துரதிஷ்டவசமாக அரையிறுதி போட்டியோடு வெளியேறிவிட்டனர். கோப்பையை வெல்லும் அளவிற்கு இருந்த இந்திய அணி, எதன் காரணமாக அரையிறுதி போட்டியோடு வெளியே வந்தது என பார்க்கும் பொழுது, இந்தியாவிற்கு துவக்கம் சரியாக அமையவில்லை.
ரோகித் சர்மா வெறும் 116 ரன்கள் மட்டுமே உலகக்கோப்பை தொடர் முழுவதும் அடித்திருந்தார். கே எல் ராகுல் 150 க்கும் குறைவான ரன்கள் மட்டுமே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி சரியான துவக்கம் டி20 போட்டியில் அமையவில்லை என்றால் அந்த அணியால் எப்படி பெரிய அளவில் ஸ்கோர் எட்ட முடியும் அல்லது அதிக ரன்களை சேஸ் செய்ய முடியும்?.
இந்நிலையில் இந்தியாவிற்கு புதிய துவக்க வீரர்கள் குறிப்பாக டி20 போட்டிகளுக்கு இளம் துவக்க வீரர்கள் தேவை. அடுத்த உலக கோப்பைக்கு இதுதான் சரியான தருணம் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
நடக்கவிருக்கும் நியூசிலாந்து தொடரில் அதற்கான பிள்ளையார் சுழி போட வேண்டும் என்று கருத்து தெரிவித்து, இவரைத்தான் இனி துவக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறி இருக்கிறார் முன்னால் இந்திய துவக்க வீரர் வாசிம் ஜாபர்.
“சுப்மன் கில்லுடன் இணைந்து ரிஷப் பண்ட் துவக்க வீரராக களமிறங்க வேண்டும். இருவரும் அண்டர் 19 உலக கோப்பையில் ஒருவரை மற்றொருவர் நன்றாக புரிந்து வைத்திருப்பர்.
ஐந்தாவது இடத்தில் களமிறங்கும் ரிஷப் பண்ட் அந்த இடத்தில் பலம் சேர்க்கிறாரா? என்று பார்த்தால் இல்லை என்று தான் கூற வேண்டும். அவரது பேட்டிங் செய்யும் விதத்திற்கு நிச்சயம் துவக்க வீரராக களம் இறங்குவது தான் அணிக்கு சிறந்ததாக இருக்கும்.
ஏனெனில் எளிதாக தூக்கி அடித்து நான்கு அல்லது ஆறு ரன்கள் ஆக மாற்றி விடுவார். எதிரணிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இது இருக்கும். அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. இப்படி பல்வேறு பரிசோதனைகளை இப்போதே செய்து பார்ப்பது மிகவும் நல்லது.” என்றார்.