ஒரு கிரிக்கெட் வீரனுக்கு இதெல்லாம் சகஜமப்பா; கே.எல் ராகுல் சொல்கிறார்
வெற்றி, தோல்வி, ஏற்றம், தாழ்வு என்பது எல்லாம் விளையாட்டில் சகஜமான ஒன்று தான் என்று இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தவான் சொதப்பியதால், அவருக்கு பதிலாக அடுத்த இரண்டு போட்டியிலும் களமிறக்கப்பட்ட கே.எல் ராகுலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக விளையாடவில்லை. இதனையடுத்து இவர் மீது விமர்ச்சனங்கள் எழுந்து வருகிறது.
டெஸ்ட் தொடருக்கு பின் நாடு திரும்பியுள்ள கே.எல் ராகுல், உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார்.
Photo by: Shaun Roy / BCCI / SPORTZPICS
இந்நிலையில் தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் தனது மோசமான பேட்டிங் குறித்து பேசிய ராகுல், விளையாட்டை பொறுத்தவரையில் ஏற்றமும், தாழ்வும் வரத்தான் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ராகுல் “நான் எப்பொழுதும் பாசிடிவ் சைடை மட்டும் பார்ப்பவன். நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது நல்லதை விட கெட்ட நாள்தான் அதிக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். இதை உங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு புதிய சிந்தனையோடு ஒவ்வொரு நாட்களும் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும்.
நீங்கள் விளையாடும் போடு கற்றுக் கொள்கிறீர்கள். உங்களுடைய விளையாட்டு வாழ்க்கையில் ஏற்றமும் தாழ்வும் ஒரு பகுதி. இது முற்றிலும் மோசம் என்று சொல்ல முடியாது. நான் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறேன். அதை சிறந்ததாக மாற்ற முடியவில்லை. என்னால் ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட முடியவில்லை. இதற்கான பதில் விரைவில் கிடைக்கும்.
தென்ஆப்பிரிக்கா தொடர் முற்றிலும் புதிய சவாலானது. நாங்கள் வேகம் மற்றும் பவுன்ஸ் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்த்தோம். அதிக அளவில் ஸ்விங் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. வேகம் மற்றும் பவுன்ஸ் உடன் ஸ்விங் என்பது புதிதானது. இந்த தொடரில் நடந்ததை எந்த தொடக்க வீரர்களும் விரும்பமாட்டார்கள். ஆனால், எனக்கு தலைசிறந்த அனுபவம்’’ என்று தெரிவித்துள்ளார்.