ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சு தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் முகமது சிராஜ்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. இந்த தொடரில் மூன்றாவது போட்டியில் முகமது சிராஜ் ஓய்வு கொடுத்து வெளியில் அமர வைக்கப்பட்டார்.
முதல் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருந்தாலும் 6 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதற்கு முன்னர் நடந்த இலங்கை அணியுடன் நடந்த தொடரில் 3வது போட்டியில் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். மூன்று போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.
தற்போது நியூசிலாந்து அணி உடனான தொடர் முடிவடைந்து ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியலில், பவுலிங் தரவரிசையில் 729 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் 727 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து வேகப்பந்து பேச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இருக்கிறார்.
மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் இந்திய அணியின் துவக்க வீரர் ஷுப்மன் கில் 20 இடங்கள் முன்னேறி முதல் முறையாக டாப் 10 இடத்திற்குள் நுழைந்து இருக்கிறார். தற்போது ஆறாவது இடத்தில் இருக்கிறார்.
விராட் கோலிக்கு நடந்து முடிந்த நியூசிலாந்து தொடர் சரியாக அமையவில்லை. ஆகையால் ஏழாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா தரவரிசை பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது ஒன்பதாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணி நியூசிலாந்தை 3-0 என வீழ்த்தியதால் 114 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியும், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் இருக்கின்றன.