தினேஷ் கார்த்திக் அடுத்த வருசமும் விளையாடட்டும்… ஆனா இவர இனி பெங்களூர் டீம்ல பார்க்க முடியாது; மைக்கெல் வான் கணிப்பு
சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்று கொண்டு அடுத்த வருட ஐபிஎல் தொடரிலும் விளையாட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கெல் வான் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தாலும், கடைசி 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட சில அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பையும் கலைத்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ப்ளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட பெங்களூர் அணி, பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் வழக்கம் போல் சொதப்பி இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்து ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறியது.
தொடர்ச்சியாக 6 வெற்றிகளுடன் கெத்தாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூர் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் இந்நாள் வீரர்கள் என பலரும் பெங்களூர் அணியின் தோல்வி குறித்தும், பெங்களூர் அணியின் எதிர்காலம் குறித்தும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
அந்தவகையில், பெங்களூர் அணி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இங்கிலாந்து வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான மைக்கெல் வான், பெங்களூர் அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்று கொண்டு அடுத்த தொடரிலும் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மைக்கெல் வான் பேசுகையில், “பெங்களூர் வீரர்கள் நிச்சயமாக பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளரான ஆண்டி பிளார் அடுத்த தொடரில் பெங்களூர் அணியை வலுவான அணியாக மாற்றிவிடுவார் என நான் நம்புகிறேன். பயிற்சியாளருக்கு தற்போது பெங்களூர் அணியின் பலம், பலவீனம் என அனைத்தும் தெளிவாக புரிந்திருக்கும், பிளார் மிக சிறந்த பயிற்சியாளர் என்பதை நான் அறிவேன். அவர் நிச்சயமாக அடுத்த தொடரில் பெங்களூர் அணியை முற்றிலுமாக மாற்றிவிடுவார். பெங்களூர் அணியின் பெரும் பலவீனமே, தனது சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டியிலும் தோல்வியை சந்திப்பது தான். சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் 80 சதவீதமான போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டாலே போதுமானது, இந்த விசயத்தில் பெங்களூர் அணி கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய மைக்கெல் வான், “என்னை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக் அடுத்த தொடரிலும் விளையாட வேண்டும். ஓய்வு முடிவை திரும்ப பெற்று கொண்டு அடுத்த தொடரிலும் அவர் விளையாட வேண்டும் என நானும் தினேஷ் கார்த்திக்கிடம் வலியுறுத்துவேன், அவர் தற்போது நல்ல பார்மிலும் இருப்பதால் அவர் தொடர்ந்து விளையாடுவதில் தவறும் எதுவும் இல்லை. அதே வேளையில் பெங்களூர் அணியில் டூபிளசிஸ் எதிர்காலம் தான் கேள்விக்குறியாக இருக்கும் என கருதுகிறேன். டூபிளசிஸ் கடந்த சில வருடங்களாக பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தாலும் பெங்களூர் அணி கோப்பையை வெல்லாததால் பெங்களூர் நிர்வாகம் சில அதிரடி முடிவுகளை எடுக்கும் என கருதுகிறேன், முக்கியமாக பந்துவீச்சாளர்கள் விசயத்தில் பெங்களூர் நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், பெங்ம்களூர் அணியின் பெரும் பலவீனமே பந்துவீச்சு தான்” என்று தெரிவித்தார்.