டோனி, யுவராஜ் இடம் குறித்து அதற்கான நேரம் வரும்போது முடிவு எடுக்கப்படும்: எம்.எஸ்.கே.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் டோனி, யுவராஜ் இடம் குறித்து அதற்கான நேரம் வரும்போது முடிவு எடுக்கப்படும் என்று தேர்வாளர் கூறியுள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி அடுத்து விளையாடக்கூடிய பெரிய தொடர் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்தான். இந்த தொடருக்கான இந்திய அணியை தற்போதில் இருந்தே உருவாக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் விரும்புகிறார்கள்.

அந்த வகையில் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள டோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் தொடர்வார்களா? இல்லையா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

கடந்த மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது. இந்த தொடரில் ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே இருவரும் சிறப்பாக விளையாடினார்கள்.

இந்த நிலையில், டோனி, யுவராஜ் சிங் ஆகியோர் 2019-ம் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை நீடிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. 2019-ல் டோனிக்கு 38 வயதாகிவிடும். யுவராஜுக்கு 37 வயதாகிவிடும்.

இந்திய அணியில் இருவருக்குமான இடம் குறித்து முதன்முறையாக ராகுல் டிராவிட் வெளிப்படையாக கருத்து கூறியிருந்தார். 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் இருவரும் இடம்பெறுவார்களா? அப்படி இடம்பிடித்தால் அந்த இடத்திற்கு மற்ற இளைஞர்கள் தகுதி இல்லையா? மற்ற இளைஞர்களை அந்த இடத்தில் களமிறக்கி சோதனை செய்தீர்களா? சோதனை செய்து இளைஞர்கள் இடத்திற்கு சரியாக அமையவில்லை. அதனால் இருவருக்கும் இடம் கொடுத்தோம் என்பீர்களா? என்று கேள்விகளை தேர்வாளர்கள் குழுவிற்கு டிராவிட் வைத்திருந்தார்.

இந்நிலையில் இருவருடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அதற்கான நேரம் வரும்போது முடிவு எடுக்கப்படும் என்று தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார்.

மேலும் டோனி, யுவராஜ் சிங் குறித்து எம்.எஸ்.கே. பிரசாத் கூறுகையில் ‘‘இருவருடைய நிலைமை குறித்து நாம் பேச வேண்டியிருக்கிறது. எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை பார்த்துதான், நாம் முடிவு எடுக்க முடியும். படிப்படியாகத்தான் நாம் செல்ல வேண்டும். ஒரு முடிவு எடுக்கும்போது, அது பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். எந்தவொரு விஷயத்திலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாது. இருவர் முடிவு குறித்து முற்றிலும் தயாராகாமல் இருக்க முடியாது. ஆகவே, அந்த நடவடிக்கைக்கான சரியான காரணம் வேண்டும்.

விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியபிறகு அதற்கான நேரம் வரும்போது முடிவு எடுப்போம்.

அணியின் தரம்குறித்து பார்வையிட எங்களுக்கு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வாய்ப்பாக அமைந்தது. பெரும்பாலான விஷயங்கள் எங்கள் எண்ணத்தில் உதித்துள்ளது. நம் அணியின் உண்மையான வலிமை எங்களுக்குத் தெரியும். வெளிப்படையாக பேசவேண்டுமென்றால், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. சில விஷயங்களை மட்டுமே சரி செய்ய வேண்டியுள்ளது. அதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். அடுத்த 18 முதல் 20 மாதங்களுக்குள் சரிசெய்து விடுவோம்.

எந்த வீரர்களெல்லாம் எங்கள் மனதில் உள்ளார்களோ, அவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுப்போம். அவர்கள் உலகக்கோப்பைக்குள் தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள். ஒருவேளை, நாம் இளம் வீரர்களை தேர்வு செய்தால், அவர்கள் உலகக்கோப்பை தொடருக்கும் தயார் ஆகும் வகையில் ஏராளமான போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.’’ என்றார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.