இந்திய அணியின் அதிரடி வீரராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. குறிப்பாக டி20 போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். சமீப காலகமாக இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை தொடரில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோர் இடம்பிடித்ததால் ரெய்னாவிற்கு இடம் கிடைக்கவில்லை. யுவராஜ் சிங்கும் அணியில் இடம்பெறவில்லை.
இருவரும் இடம் பிடிக்காததற்கு உடற்தகுதிதான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் சுரேஷ் ரெய்னா கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது அவர் துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். கடின பயிற்சியின் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
30 வயதாகும் சுரேஷ் ரெய்னா இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் கடுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் சாதுவாக ஒதுங்கிவிடும் வீரர் அல்ல என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நான் எப்போதுமே கடின உழைப்பின் மேல் நம்பிக்கை வைப்பவன். 60 சதவீதம் கடின உழைப்புடன், 40 சதவீதம் அதிர்ஷ்டம் தேவை. யுவராஜ் சிங்கை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இதைத்தான் செய்தார். கடினமாக பயிற்சி செய்து மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.
நீங்கள் யாருக்கும் எந்த விஷயத்தையும் நிரூபித்து காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சச்சின் தெண்டுல்கர் என்னிடம் கூறினார். மேலும், நீங்கள் அதிக அளவில் செய்து காட்டிவிட்டீர்கள், உங்களது கிரிக்கெட்டை ரசித்து விளையாடுங்கள், என்றும் சச்சின் கூறினார். எனக்கு வாய்ப்பு மீண்டும் வரும் என்று எனக்குத் தெரியும்’’ என்றார்.