‘ஆஷஸ்’ தொடரை வார்னர் போருடன் ஒப்பிட்டது மோசமானது: ஜோ ரூட் சொல்கிறார்

ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனான டேவிட் வார்னர், ஆஷஸ் தொடரை போருடன் ஒப்பிட்டது மிகவும் மோசமானது என ஜோ ரூட் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமானது ஆஷஸ் தொடர். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக செயல்படும்.

அடுத்த மாதம் 23-ந்தேதி பிரிஸ்பேனில் ஆஷஸ் தொடர் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்திருந்தார். ஆனார், வாலிபரை தாக்கிய வழக்கில் விசாரணை நடப்பதால் ஆஷஸ் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

‘‘வரலாறு, பெருமை ஆகியவைதான் இந்தத் தொடரில் முக்கியம், எனவே இதனைக் காப்பாற்ற களமிறங்கும் போது அது போர் தான்.

போரில் மிகவிரைவில் களமிறங்க முயற்சி செய்வோம். எதிரணி வீரர்களின் கண்களை கூர்ந்து நோக்கி, அவர்களை நான் எப்படி வெறுக்க வேண்டும், அவரை எப்படி வீழ்த்த வேண்டும் என்பதைப் பழக வேண்டும்.

நமக்குள் இருக்கும் தீப்பொறியைக் கண்டுபிடித்து எதிரணியினரிடத்தில் அதனைக் கொண்டு செல்ல வேண்டும். நாம் அவர்கள் மீதான வெறுப்புணர்வை பெற, ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.’’ என்று ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனும் ஆன வார்னர் கூறியிருந்தார்.

வார்னரின் இந்த கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனும், கேப்டனும் ஆன ஜோ ரூட், ஆஷஸ் தொடரை போர் உடன் ஒப்பிட்டது மிகவும் மோசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘கிரிக்கெட் மிகவும் போட்டிற்குரிய ஆட்டம். ஒவ்வொருவரும் மைதானத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள். நான் அதை போர் என்று குறிப்பிடமாட்டேன். இது சற்று அதிகப்படியாக வார்த்தை என்று நினைக்கிறேன்’’ என்றார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.