இரண்டு மாதத்திற்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை அனில் கும்ப்ளே ராஜினாமா செய்தது வருத்தம் அளிக்கிறது என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
“அவருக்கு அது போல் நடந்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அவர் அது போன்ற மனிதர் இல்லை என்று எனக்கு தெரியும். தனக்கிருக்கும் மரியாதை போய்விட கூடாதென்று அவரே வெளியே வந்து விட்டார். அவர் செய்தது சரி தான் என்று தோன்றுகிறது,” என அசாருதீன் கூறினார்.
ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இதை பற்றி அவர் பேசினார். 27 ஆண்டுக்கு முன்பு அனில் கும்பளே, அசாருதீன் தலைமையில் தான் அறிமுகமானார். இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளரே அனில் கும்ப்ளே தான். இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர் அனில் கும்ப்ளே தான்.
2016 ஜூன் மாதம், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பதவி ஏற்றார். அதன் பிறகு, கும்ப்ளே மற்றும் கோலிக்கும் இடையே மோதல் என தகவல்கள் வந்தன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, குல்தீப் யாதவை அணியில் சேர்க்க சொன்னார் கும்ப்ளே, ஆனால் விராட் கோலி அதை கண்டுகொள்ள வில்லை. இதனால், இருவருக்கும் இடையே மோதல் பெரியதாகியது.
அடுத்த டெஸ்ட் போட்டியில் தோள்பட்டை காயம் காரணமாக கோலி வெளியே உட்கார, டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் அறிமுகமானார். சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பின்னர், பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் அனில் கும்ப்ளே.
இதுமட்டும் இல்லாமல், ஸ்ரீசாந்தை பற்றியும் பேசினார் அசாருதீன்.
“4 வருடத்தை வீணாக்கினார் ஸ்ரீசாந்த். மீண்டும் அவர் நல்ல உடல்நல தகுதியுடன் வரவேண்டும். அவர் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர் தான், ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. அதை பற்றி அவர் மேலும் யோசித்தால், அவர் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளராக வர வாய்ப்பு உள்ளது,” என அசாருதீன் தெரிவித்தார்.