ரிவியூ எடுக்கும் பொழுது விக்கெட் கீப்பர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் ரோகித் சர்மா அதை செய்ய தவறிவிட்டதால் மிகப்பெரிய பின்னடைவு இந்தியாவிற்கு வந்திருக்கிறது என்று விமர்சித்துள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சில், 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் அடித்தார். ஸ்பின்னர் குன்னமென் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் களத்தில் செய்த சில தவறுகளால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
ஜடேஜா வீசிய பந்தில் லபுஜானே 0 ரன்னில் இருக்கும்பொழுது போல்டானார். ஆனால் அது நோ-பால் ஆனது. அந்த டென்ஷனில் பந்துவீசி வந்த ஜட்டு, கவாஜா காலில் பட்ட பந்திற்கு எல்பிடபிள்யூ கேட்டார்.
களநடுவர் அவுட் கொடுக்கவில்லை. உடனடியாக ரோகித் சர்மாவிடம் சென்ற ஜட்டு, ரிவியூ எடுக்கும்படி வற்புறுத்தினார். கீப்பர் கேஎஸ் பரத் மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் ஜடேஜாவின் பேச்சைக்கேட்டு ரிவியூ எடுத்தது வீண் ஆனது.
அதற்கு அடுத்த ஓவரில் மீண்டும் கவாஜாவின் காலில் பட்டதற்கு ரிவியூ கேட்க அதுவும் வீணானது. 15 ஓவர்களுக்குள் 2 ரிவியூக்களை இழந்த இந்திய அணி, 3வதையும் விரைவாக இழந்தது.
இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த அலட்சியம் தான் இந்தியாவிற்கு பின்னடைவை கொடுத்தது. ரிவியூ எடுக்கும்பொழுது கீப்பரிடம் கேட்காமல் இருந்தது முறையற்றது என்று விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர்.
“இன்றைய போட்டி எப்படி இருந்தது என்றால், சீனியர் வீரர் ரிவியூ வேண்டும் என்று கேட்கிறார். கீப்பர் பரத் அது சரிவரவில்லை என்கிறார். ஆனால் கீப்பர் பரத்திற்கு மரியாதை கொடுக்காமல் சீனியர் வீரர் கேட்டதற்காக ரிவியூ சென்றார்கள். ஆனால், பார்த் இருக்கும் பொசிஷன் தான் ரிவியூ போலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வதற்கு சரியான இடம்.
ஆஸி., அணியில் ரிவியூ என்றாலே உடனடியாக அலெக்ஸ் கேரி இடம் கேட்பார்கள். ஆனால், இந்திய அணியை பொறுத்தவரை பரத்திடம் அப்படி கேட்பதில்லை. ரிவியூ என்று வரும்பொழுது சீனியர்-ஜூனியர் என்பதை ஓரமாக வைத்துவிட்டு, யாருடைய பொசிஷனில் இருந்து பார்த்தால் தெளிவாக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டு அவரிடம் கேட்டுவிட்டு ரிவியூ செல்லவதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்திருக்கவேண்டும்.
அஸ்வின், ஜடேஜா இருவரும் சிறந்தவர்கள், ஆர்வத்தில் ரிவியூ போலாம் என்றுதான் உணர்ச்சி வசப்படுவார்கள். ஆனால் கேப்டன் தான் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். இனியாவது திருந்துங்கள்.” என்று சாடினார் சஞ்சய் மஞ்ரேக்கர்.