தல இருக்குற வரைக்கும் நம்மள தடுக்கவே முடியாது; குல்தீப் யாதவ்
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் அறிவுரைகள் கை கொடுத்ததாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் டர்பனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ் சதம் அடித்து கை கொடுத்ததன் மூலம் இந்திய அணிக்கு 270 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய சைனாமேன் பவுலர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தென் ஆப்ரிக்காவை திணறடித்தார்.
இதனையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியை கோஹ்லி மற்றும் ரஹானே தங்களது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று கொடுத்தனர்.
இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசியுள்ள குல்தீப் யாதவ், முதல் போட்டியில் தோனியின் அறிவுரைகள் தான் சிறப்பாக பந்துவீச உறுதுணையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய குல்தீப் யாதவ் “தென் ஆப்ரிக்காவில் முதல் முறையாக விளையாடுகிறேன். அங்கு காற்று பலமாக வீசியதால், எந்தமுறையில் பந்தை சுழற்றுவது என முதலில் தடுமாறினேன். அப்போது விக்கெட் கீப்பர் தோனியிடம் சென்று எப்படி பந்துவீசுவது என்று கேட்டேன்.
அதற்கு தோனி எதை பற்றியும் கவலைப்படமால் எனது இயற்கையான முறைப்படி கூலாக பவுலிங் செய்ய அறிவுறுத்தினார். அதன் பின் தான் எனக்கு தெளிவு கிடைத்தது. தோனி அத்தோடு விட்டுவிடாமல் ஸ்டெம்பிற்கு பின்னால் நின்று கொண்டு ஹிந்தி மொழியில் எனக்கு பல அறிவுரைகள் வழங்கி கொண்டே இருந்தார். இதன் காரணமாகவே என்னால் சிறப்பாக பந்துவீச முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.