தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக தவானுக்கு பதில் கே.எல் ராகுல் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரில் முதலில் நடைபெற்று வரும் இரு அணிகள் இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெறும் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, மோசமான பேட்டிங் காரணமாக 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி பவுலிங்கில் போதுமான அளவு சிறப்பாக செயல்பட்ட போதும், சொதப்பல் பேட்டிங் காரணமாகவே தோல்வியடைந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக இந்திய அணிக்கு முதல் போட்டியில் துவக்கமே சரியாக அமையாததால், இரண்டாவது போட்டியில் மாற்று வழியை காண இந்திய அணி திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல் போட்டியில் சொதப்பிய தவானுக்கு பதில், கே.எல் ராகுலை இரண்டாவது போட்டியின் துவக்க வீரராக களமிறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இந்திய அணியின் துணை கேப்டனான ரஹானேவையும் இரண்டாவது போட்டியில் களமிறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஷாந்த் சர்மாவும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படம் மற்றும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானதால் அவரும் இரண்டாவது போட்டியில் பும்ராஹ்விற்கு பதிலாக களமிறங்க வாய்ப்புள்ளது.
இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.