புதிய பயிற்சியாளர் பற்றிய எந்த ஒரு ஆக்கப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை

ரவி சாஸ்த்திரி தான் அடுத்த பயிற்சியாளர் என்று பரவிய செய்தியை தற்போது பிசிசிஐ முற்றிலும் மறுத்து உள்ளது.

பயிற்சியாளருக்கான நேர்காணல் மும்பையில் நேற்று நிறைவடைந்தது. ஆனால் பயிற்சியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு உடனடியாக அறிவிக்கப்படவில்லை. பயிற்சியாளரை தேர்வு செய்ய சில நாள்கள் காலஅவகாசம் தேவைப்படுவதாக பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி தெரிவித்தது.

மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நேர்காணலை சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி நடத்தியது. சச்சின் லண்டனில் இருப்பதால் ஸ்கைப் மூலம் பங்கேற்றார். ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பிபஸ், லால்சந்த் ராஜ்புட் ஆகியோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இவர்களில் சேவாக் மட்டுமே நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டார்.

நேர்காணலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி கூறியதாவது: ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பிபஸ், லால்சந்த் ராஜ்புட் ஆகிய 5 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகளின் பில் சிம்மன்ஸ் நேர்காணலில் தன்னால் பங்கேற்க இயலாது என தெரிவித்துவிட்டார். பயிற்சியாளரை இறுதி செய்ய எங்களுக்கு சில நாள்கள் காலஅவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பயிற்சியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை ஒத்திவைத்துள்ளோம். இலங்கை டெஸ்ட் தொடருக்கு ஓரளவு காலஅவகாசம் இருப்பதால், பயிற்சியாளரை அறிவிப்பதில் அவசரம் தேவையில்லை என கருதுகிறோம். புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் 2019 உலகக் கோப்பை போட்டி வரையில் அந்தப் பதவியில் இருப்பார். பயிற்சியாளர் விஷயத்தைப் பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட்டின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்றார்.

கோலி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கங்குலி, ‘பயிற்சியாளர் அணியை எப்படி இயக்குகிறார் என்பதை இந்திய கேப்டன் விராட் கோலி புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் பயிற்சியாளர் தேர்வு விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கியிருக்கும் விராட் கோலியை பாராட்டியாக வேண்டும். அவர், மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து நாடு திரும்பிய பிறகு அவரிடம் பயிற்சியாளர் விஷயம் குறித்து பேசவிருக்கிறோம். அதேநேரத்தில் இந்திய அணி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அதில் விராட் கோலி முக்கிய நபராக இருப்பார்’ என்றார்.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இன்று செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்திய பயிற்சியாளராக இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்று பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி அறிவித்துள்ளார். ரவி சாஸ்திரி தேர்வானதாக வெளியான செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

விண்ணப்பித்த வீரர்கள் :

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, விரேந்தர் சேவாக்,பில் சிம்மன்ஸ், லால் சந்த் ராஜ்புட், டாம் மூடி மற்றும் ரிச்சர்ட் பைபஸ் ஆகியோர் விண்ணப்பித்து இருந்தார்கள்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.