கதை
ஒன்பது மாதங்கள் கழித்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த இடது கை வீரர் ஷிகர் தவான், அந்த வாய்ப்பை தவறவிடாமல் 190 ரன் அடித்தார். இவர் முதலில் இந்த அணியில் இடம் பெறவில்லை, முரளி விஜய் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதால், இந்திய டெஸ்ட் அணிக்கு அவரை அழைத்தார்கள். இருந்தாலும் லோகேஷ் ராகுல் மற்றும் அபினவ் முகுந்த் இருப்பதால், அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் காரணமாக லோகேஷ் ராகுலும் விலகியதால், தவானுக்கு வாய்ப்பு கிடைத்தது.
விவரங்கள்:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதலில் டெஸ்ட் டெஸ்ட் போட்டி காலேயில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது.
இந்திய அணியின் ஆட்டக்காரர்களாக அபினவ் முகுந்த் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். முகுந்த் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா, தவானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி, பொறுப்புடன் விளையாடி நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தது.
சதம் அடித்த ஷிகர் தவான், தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய புஜா அரை சதம் கடந்தார்.
அணியின் ஸ்கோர் 280 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. 190 ரன்கள் எடுத்த ஷிகர் தவான், ஆட்டமிழந்தார். 168 பந்துகளை சந்தித்து 31 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை அவர் எட்டினார். இதனால் 10 ரன்னில் இரட்டை சதம் வாய்ப்பை தவறவிட்டார். டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
ஷிகர் தவானைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டையும் பிரதீப் கைப்பற்றினார். இதனால் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து நிதானமாக ஆடிய புஜாரா சதத்தை நோக்கி பயணித்தார்.
அடுத்தது என்ன?

தன் முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை தவறவிட்டது வருத்தம் அளிக்கிறது என ஷிகர் தவான் வருத்தம் தெரிவித்தார்.
“எனக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம் அளிக்கிறது. ஆனால், முரளி விஜய்க்கு காயம் ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது. ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினேன், அதே போல் டெஸ்ட் போட்டியும் விளையாடவேண்டும் என நம்பிக்கையோடு இருந்தேன்,” என தவான் கூறினார்.
“இரட்டை சதத்தை தவறவிட்டது வருத்தம் அளிக்கிறது. ஆனால், 190 அடித்தது சந்தோசமாக இருக்கிறது,” என ஷிகர் தவான் தெரிவித்தார்.