எனது பைஜாமாவை விற்றாவது தோனியை வாங்குவேன் – ஷாருக்கான்

வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்குரிய தோனி, ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றியது.

ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் தோனி, தற்போது ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனுக்கான புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி கழற்றி விடப்பட்டு, ஸ்டீவன் சுமித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கம் செய்யப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல். போட்டி தொடரில் மீண்டும் இடம் பெறுகிறது. புதிய அணியாக இடம் பிடித்த குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் ஆகிய அணிகள் அடுத்த சீசனில் ஐ.பி.எல். போட்டியில் நீடிக்குமா? என்பது தெரியவில்லை.

10 ஆண்டு ஒப்பந்தம் முடிந்து விட்டதால் அடுத்த ஆண்டு (2018) எல்லா அணிகளில் உள்ள வீரர்களும் ஏலத்தில் வருவார்கள். தோனியை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் தோனியை கைப்பற்றுவதில் மற்ற அணிகளும் மல்லுக்கட்ட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், இந்தி நடிகருமான ஷாருக்கானிடம் கேட்ட போது, ‘எங்கள் அணிக்கு தோனியை வாங்குவதற்காக எனது பைஜாமா உள்பட எதனையும் விற்க நான் தயார். ஆனால் அவர் ஏலத்தில் இடம் பெறுவதை பொறுத்து தான் இது சாத்தியமானதாகும்’ என்றார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.