சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (16-ந் தேதி) தொடங்குகிறது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக யார் விளையாடுவார்கள் என குழப்பம் அதிகரித்து கொண்டே போகிறது. இலங்கைக்கு சென்று இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடிய போது, காயம் காரணமாக முரளி விஜய் அந்த தொடரில் இருந்து விலகினார். இதனால், அவருக்கு பதிலாக ஷிகர் தவான் அணியில் இடம் பிடித்து,சிறப்பாக விளையாடி அந்த தொடரில் தொடர்நாயகன் விருதை வென்றார்.
இந்திய அணியில் வழக்கமாக விளையாடும் வீரர்களுக்கே முக்கிய துவம் அளிப்பார்கள். இதனால், அனைவரும் தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் தான் நல்ல முடிவு என கூறுகிறார்கள். சான்றாக, கடந்த வருடம் வ்ரிதிமான் சாஹாக்கு பதிலாக இந்திய அணியில் நுழைந்த பார்திவ் பட்டேல், சிறப்பாக விளையாடினார். ஆனால், சாஹா வழக்கமாக விளையாடும் வீரர் என்பதால், காயம் சரியான பிறகு மீண்டு சாஹா இந்திய அணியில் இடம் பிடித்தார்.
முரளி விஜயா அல்லது ஷிகர் தவானா என்ற தலைப்பை பற்றி பேசிய போது, ஆச்சரிய படுத்தும் வகையில் பதில் அளித்தார் முன்னாள் தொடக்கவீரர் விரேந்தர் சேவாக். இந்திய அணியின் முன்னாள் தொடக்கவீரர் விரேந்தர் சேவாக், டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் தொடக்க வீரர்களாக களமிறங்கவேண்டும் என்று கூறினார். பெரிய ஸ்கோர் அடிக்கும் திறன் விஜயிடம் உள்ளதால், ராகுலை விட விஜய் தான் விளையாட வேண்டும் எனவும் சேவாக் கூறினார்.
“லோகேஷ் ராகுலை விட முரளி விஜய் அதிக சதம் அடித்துள்ளார். அரைசதம் அடித்தால் அதை சதமாக மாற்றுவார் முரளி விஜய். லோகேஷ் ராகுல் தொடர்ந்து அடித்த 7 அரைசதங்களில், ஒரு சதமோ அல்லது ஒரு இரட்டை சதமோ இருந்தால், நான் அவரை தான் தேர்ந்தெடுப்பேன். டெஸ்ட் போட்டியில் அதிக ரன் அடிக்கும் வீரரை தான் தேர்வு செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். அதே போல், விஜய் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு காரணமாக தான் வெளியே இருந்தார், அவரை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கவில்லை,” என விரேந்தர் சேவாக் கூறினார்.
“என்னை பொறுத்தவரை தவான் மற்றும் லோகேஷை விட முரளி விஜய் தான் டெஸ்ட் போட்டியில் சிறப்பான வீரர். அதிக ரன் அடிப்பவர்கள் தான் டெஸ்ட் அணியில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து,” என சேவாக் மேலும் கூறினார்.
ஒரு காலத்தில் எதிரணிகளை புரட்டி போட்ட சேவாக், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று வர்ணனை செய்ய தொடங்கினார். அவர் இலங்கை அணியை சாதாரணமாக எடை போட கூடாது எனவும் தெரிவித்தார்.
“இலங்கை அணி பாகிஸ்தான் அணியிடம் டெஸ்ட் தொடரை வென்று ஒரு நம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால், இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஐந்து நாட்களுமே விளையாடுவார்களா என்பது தான் கேள்வி? இந்திய அணியுடன் ஐந்து நாட்கள் இலங்கை அணி போராடுமா? இந்திய அணி கண்டிப்பாக டெஸ்ட் தொடரை வெல்லும். ஆனால், இதற்காக எத்தனை நாட்களை இந்திய அணி எடுத்து கொள்ளும் என்பதை பார்ப்போம்,” என சேவாக் மேலும் தெரிவித்தார்.