2011ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி லிமிடெட் ஒவர் போட்டிகளில் என்ன செய்திருக்கிறது? என்று கடுமையாக சாடி இருக்கிறார் நீங்கள் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.
தோனி தலைமையில் 2007ஆம் ஆண்டு டி20 உலககோப்பை, 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலககோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி என இந்திய அணி கடைசியாக 9 ஆண்டுகளுக்கு முன்பு ஐசிசி கோப்பையை வென்றிருக்கிறது. அதன்பிறகு லிமிடெட் ஓவர் போட்டிகளில் சோக்கர்களாக இந்திய அணி இருந்திருக்கிறது.
விராட் கோலி தலைமையில் கால் இறுதிப் போட்டி, அரை இறுதி போட்டி என முக்கியமான நாக்-அவுட் போட்டிகளில் தோல்வி தழுவி ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளது.
கோலி தலைமையில் 2019 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான உலககோப்பை மற்றும் தற்போது ரோகித் தலைமையில் 2022 ஆம் ஆண்டு டி20 போட்டிகளுக்கான உலககோப்பை இரண்டிலும் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் அளவிற்கு பலம் பொருந்தியதாக இருந்தது. ஆனால் இரண்டிலும் சரியாக அரையிறுதி போட்டியுடன் வெளியேறியதால் கடும் அதிர்ச்சிக்கு ரசிகர்கள் உள்ளாக்கினர்.
இந்நிலையில் இந்திய அணி பல திறமையான வீரர்களை வைத்திருந்தும் தொடர்ச்சியாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் மோசமாக செயல்படுகிறது என்று கடுமையாக சாடியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.
“தோனி தலைமையில் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி லிமிடெட் ஓவர் போட்டிகளில் என்ன செய்திருக்கிறது? ஒன்றுமே கிடையாது. பல நாடுகளின் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கு சென்று நிறைய கற்றுக் கொண்டோம் என்று கூறுகின்றனர். ஆனால் ஐபிஎல் தொடரை நடத்தும் இந்திய அணியின் வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் என்ன செய்திருக்கிறார்கள்?. பல திறமையான வீரர்களை வைத்துக்கொண்டு இந்திய அணி என்ன சாதித்து இருக்கிறது? சரியான வீரர்கள் இருந்தும் ஒன்றிணைந்து சரியான செயல்பாடு இல்லாததால் தொடர் தோல்விகளை பெற்று வருகிறது.” என சுட்டிக்காட்டினார்.
“முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்தியாவின் குறை சுட்டிக்காட்ட பயப்படுகின்றனர். அப்படி சுட்டிகாட்டினால், பிசிசிஐ வேலையில் இருந்து தூக்கி விடுமோ? அல்லது இனிவரும் வேலைகளுக்கு எடுக்காமல் போய்விடுமோ? என்ற பயத்தில் அவர்கள் இப்படி செய்கிறார்கள். உள்ளதை உள்ளபடி நேரடியாக கூற வேண்டும். இந்திய அணி வெற்றி பெறுவது தான் முதன்மையானது. மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு ஏன் சுயநலமாக இப்படி இருக்க வேண்டும்?.” என்றும் அவர் முன்னாள் வீரர்களை சாடியிருக்கிறார்.