விராட் கோலி
விராட் கோலி
ஓபனாவே சொல்றேன்… விராட் கோலி இல்லேனா இந்திய அணி செமி ஃபைனலுக்கு கூட போகாது; வெளிப்படையாக பேசிய முன்னாள் வீரர்

விராட் கோலி இல்லாமல் டி.20 உலகக்கோப்பையை இந்திய அணி எதிர்கொண்டால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதே மிக கடினம் என முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த டி.20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சீனியர் வீரர்களை ஓரங்கட்டிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்த பிசிசிஐ., அதன் ஒரு பகுதியாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டிவிட்டு, ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன் பதவியையும் ஒப்படைத்தது.

டி.20 போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்பட்ட தொடர்ச்சியாக காயமடைந்து வருவதால் மீண்டும் ரோஹித் சர்மாவிற்கு டி.20 அணியில் இடம் கொடுத்த பிசிசிஐ., அவரே டி.20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்படுவார் என்பதையும் உறுதி செய்தது. ஆனால் விராட் கோலி டி.20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து தெளிவான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ஒரு சிலர் விராட் கோலிக்கு நிச்சயமாக டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காது என்றும், ஒரு சிலர் விராட் கோலி இல்லாமல் இந்திய அணி டி.20 உலகக்கோப்பை தொடரை சந்திக்க வாய்ப்பே இல்லை என்றும் பேசி வருகின்றனர். இதனால் இந்திய டி.20 அணியில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.

ஓபனாவே சொல்றேன்... விராட் கோலி இல்லேனா இந்திய அணி செமி ஃபைனலுக்கு கூட போகாது; வெளிப்படையாக பேசிய முன்னாள் வீரர் !! 1

இந்தநிலையில், டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என பரவி வரும் செய்தி குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த், விராட் கோலி இல்லையென்றால் இந்திய அணியால் டி.20 உலகக்கோப்பையில் அரையிறுதி சுற்றுக்கு கூட செல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீகாந்த் பேசுகையில், “விராட் கோலி இல்லாமல் டி.20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி சந்தித்தால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை தான் ஏற்படுத்தும். கடந்த டி.20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்று வரை தகுதி பெற்றதற்கு காரணமான வீரர்களில் விராட் கோலி தான் முதன்மையானவர். விராட் கோலிக்கு இடம் கிடைக்காது என்ற செய்தியை யார் பரப்பி வருகிறார்கள், அவர்களது உள்நோக்கம் என்ன..? அவர்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லையா..? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால் விராட் கோலி இந்திய அணிக்கு மிக முக்கியமானவர். இந்திய டி.20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அதற்கு விராட் கோலி மிக அவசியம்.  விராட் கோலி இல்லை என்றால் இந்திய அணியால் அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாது. விராட் கோலியை போன்ற ஒருவர் இருப்பதே இந்திய அணியின் மிகப்பெரும் பலம், விராட் கோலியின் தேவை இந்திய அணிக்கு 100 சதவீதம் தேவை. விராட் கோலிக்கு உண்டான மரியாதை நிச்சயம் கிடைக்கும், கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம், இது நடக்கும் என நான் முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *