ஆசிஷ் நெஹ்ரா ஒரு அறிகூர்மை மிக்க வீரர், என விராட் கோலி அவரை புகழ்ந்துள்ளார். மேலும், அவ்வளவு அறுவை சிகைச்சைக்ப் பிறகு கிரிக்கெட் ஆடுவது அவ்வளவு எளிதல்ல எனவும் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப் பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா, தனது சொந்த மைதானமான டெல்லி பெரோஷா கோட்லாவில் நேற்று நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
38 வயதான அவர் 19 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்கினார். ஓய்வு பெற்ற அவருக்கு இந்திய அணி வீரர்கள் பிரியா விடை கொடுத்தனர்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது,
“இந்திய அணி அற்புதமாக செயல்பட்டுள்ளது. ஆடகளத்திற்கு ஏற்றார் போல் விளையாடி இந்திய அணியை வெற்றிபெறச் செய்தனர் வீரர்கள். தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் வெற்றிக்கு வித்திட்டனர்.
மேலும், 13 வயதில் 2003ஆம் ஆண்டு நெஹ்ராவிடம் விருது பெறுவது போல் ஓரு புகைப்படம் இருந்தது அதனைப்பற்றி அவரிடம் கேட்ட போது,
“அந்த சமயத்தில் நான் என்னுடைய மாநில அணிக்கு தேர்வாக மிகவும் கஷ்டப்பட்டிருந்தேன். ஆனால், தற்போது அவர் ஓய்வு பெறுகிறார் அந்த அணிக்கு நான் கேப்டனாக இருக்கிறேன். ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் வந்து விளையாடுவது மிகக்கடினமான ஒன்றாகும். அவருக்கு இது போன்ற ஒரு பிரியாவிடையை கொடுப்பது தான் சிறந்தது. அவருக்கு ஒரு அற்புதாமன் குடும்பம் இருக்கிறது அவர்கள நன்றாக பார்த்துக்கொள்வார்கள்”
“ஒரு வேகப் பந்து வீச்சாளராக 19 வருடங்கள் கிரிக்கெட் விளையாடியது பெரிய சாதனை. நான் விளையாடிய அணிகளில் புத்திசாலித்தனமாக வீரர்களில் நெஹ்ராவும் ஒருவர். எப்போதுமே அவர், இளம் வீரர்களுக்கு உதவுவதை விரும்பக்கூடியவர். ஆட்டத்தின்போது குறிப்பிட்ட சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பார். அவர் விடைபெற்று செல்வதை பார்க்க வருத்தமாகவே உள்ளது. எனினும் இது அவரது சொந்த மைதானத்தில் நிகழ்கிறது” என்றார்.
ஆட்டம் தொடங்குதற்கு முன்னதாக இந்திய அணி சார்பில் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு விராட் கோலியும், மகேந்திர சிங் தோனியும் இணைந்து நினைவுப் பரிசு வழங்கினார்கள்.
டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய அழைத்தது நியூஸிலாந்து. இதனையடுத்து இந்திய அணி ரோஹித் சர்மா (80), ஷிகர் தவண் (80) ஆகியோரது சாதனைக்கூட்டணியுடன் விராட் கோலியின் அபாரமான அதிரடி ஆட்டத்திலும் 20 ஓவர்களில் 202/3 என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி சாஹல், அக்சர் படேல், புவனேஷ் குமார் பந்து வீச்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்களையே எடுக்க முடிந்தது. நியூஸிலாந்து அணியில் மீண்டும் டாம் லேதம் அதிகபட்சமாக 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் அக்சர் படேல் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சாஹல் 26 ரன்களுகு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற புவனேஷ், பும்ரா, பாண்டியா தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற, இன்றைய ஓய்வு நாயகனான நெஹ்ரா 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்தார் துரதிர்ஷ்டவசமாக விக்கெட் விழவில்லை, இவர் பந்தில் மன்ரோவுக்கு பாண்டியா கடினமான கேட்ச் ஒன்றை பிடிக்க முயன்று தோல்வியடைந்தார். நெஹ்ரா ஆட்டத்தின் முதல் ஓவரையும் கடைசி ஓவரையும் வீசி மகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்றார்.
ஆஷிஷ் நெஹ்ராவை இந்திய வீரர்கள் தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தனர் 18 ஆண்டுகால கிரிக்கெட் வெற்றியுடன் முடிந்தது.