இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் போல் ஹர்திக் பாண்டியா தலைசிறந்த ஆல்ரவுண்டராக செயல்படுவார் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
காலேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போடடியில் இந்தியா 304 ரன்கள் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய ஆடம் லெவன் அணியில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருந்தது.
ரோகித் சர்மா அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விராட் கோலி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பு வழங்கினார். இதன்மூலம் ஹர்திக் பாண்டியா டெஸ்டில் அறிமுகமானார். முதல் இன்னிங்சில் 50 ரன்கள் அடித்ததுடன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் மீது கேப்டன் விராட் கோலி அதிக நம்பிக்கை வைத்துள்ளார். சிறப்பாக விளையாடும் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து அணியின் தலைசிறந்த பென் ஸ்டோக்ஸ் போன்று சிறப்பான வீரராக செயல்படுவார் என்று கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஹர்திக் பாண்டியா மீது நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். ஹர்திக் பாண்டியா நம்பிக்கையுடன் விளையாடி வளர்ச்சி பெற்றால், பென் ஸ்டோக்ஸ் போன்ற சிறந்த ஆல்ரவுண்டர் போல் அவரை பார்க்க முடியும். இங்கிலாந்து அணிக்கு ஆல்ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் என்ன செய்து வருகிறாரோ? அதைபோல் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக செய்வார்.
முதல் இன்னிங்சில் ஹர்திக் பாண்டியாவிற்கு பந்துவீச அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் 2-வது இன்னிங்சில் வாய்ப்பு கிடைத்தது. அவர் சிறப்பாக பந்து வீசினார். ஆடுகளம் பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு கொடுக்காத போதிலும், சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தார்.
ஹர்திக் பாண்டியா பவுன்சர் பந்து வீசுவதில் சிறந்தவர். 135 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். அதனால் அவர் எங்களின் சிறந்த சொத்து. இதற்கு முன்பும் அவரை பற்றி நான் சொல்லியிருக்கிறேன்.
முதல் இன்னிங்சில் நாங்கள் 540 முதல் 550 ரன்கள்தான் எடுத்திருப்போம். ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 50 ரன்கள் குவித்தனர். இதனால் எங்களுக்கு நேரம் சேமிப்பானது. அதனால் நாங்கள் கூடுதல் 15 ஓவர்கள் வீச முடிந்தது. அவர் மிகவும் அபாரனமாக பீல்டர்’’ என்றார்.