சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து… காட்டடி அடித்த ஆண்ட்ரியூ ரசல்; ஹைதராபாத் அணிக்கு கடின இலக்கு
ஐபிஎல் டி.20 தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்துள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 3வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான பிலிப் சால்ட் 54 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஒரு ரன் கூட எடுக்காமலும், நிதிஷ் ராணா 9 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். அடுத்ததாக களத்திற்கு வந்த ரமன்தீப் சிங் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த ரிங்கு சிங் – ஆண்ட்ரியூ ரசல் ஜோடி, கடைசி ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ரன்னும் சேர்த்தது. ரிங்கு சிங் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். கடைசி பந்து வரை விக்கெட்டை இழக்காமல் காட்டடி அடித்த ஆண்ட்ரியூ ரசல் 25 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 64* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 208 ரன்கள் குவித்துள்ளது.
பந்துவீச்சில் ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 3 விக்கெட்டுகளையும், மாயன்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.